புதுடெல்லி: மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் கடப்பிதழ் சேவை மையம் திறக்கப்படவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம், குணா பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கடப்பிதழ் சேவை மையத்தை திரு ஜோதியாதித்ய சிந்தியா திறந்துவைத்தார்.
அந்நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், “நாட்டில் கையால் கடிதங்கள் எழுதும் பாரம்பரியத்தை மீட்டெடுக்க நாம் முயற்சி செய்ய வேண்டும். ஏனெனில் அது இதயத்தின் உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்துகிறது,” என்றார்.
மேலும், தபால் நிலையங்களின் சேவைகளில் பல தொழில்நுட்ப மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் நாடு முழுவதும் 6,000 தபால் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
“பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலில் இந்தியாவில் உள்ள 543 தொகுதிகளிலும் கடப்பிதழ் சேவை மையம் விரைவில் திறக்கப்படும். இந்த தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என வெளியுறவு அமைச்சும் அஞ்சல் துறையும் உறுதிகொண்டுள்ளன,” என்று உரையின்போது அமைச்சர் கூறினார்.