புதுடெல்லி: இந்தியாவில் விலங்குகளுக்கு ஏற்படும் தொற்று மற்றும் பரவும் நோய்களைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் மத்திய அரசு புதிய விதிமுறைகளை முன்மொழிந்துள்ளது.
கால்நடைகளிடையே பரவும் நோய்கள் தொடர்பில் மேம்படுத்தப்பட்ட கண்காணிப்பு, உரிய நேரத்தில் அறிக்கை அளித்தல் ஆகியவற்றை அந்த விதிமுறைகள் வலியுறுத்துகின்றன.
குறிப்பாக, கால்நடைகளுக்கு இடையே பரவும் தொற்றுநோயை ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தெரிவிக்கத் தவறுவோரைத் தண்டிக்கவும் அவை பரிந்துரைக்கின்றன.
அரசாங்கத்தின் பரிசீலனையில் உள்ள விதிமுறைகள் குறித்து கால்நடை வளர்ப்புத் துறை அதிகாரி ஒருவர் விளக்கினார்.
“மிகவும் விரிவான நோய் கண்காணிப்பு மற்றும் அறிக்கை அளிக்கும் கட்டமைப்பை புதிய விதிமுறை அறிமுகப்படுத்துகிறது.
“மேலும், இது மின்னிலக்க முறையில் அறிக்கை அளித்தல், தடுப்பூசிப் பதிவுகள், கால்நடை மருத்துவர்களின் பொறுப்புகள், விரைவான அரசு கண்காணிப்பு ஆகியவற்றை உள்ளடக்கி, தற்போதுள்ள அமைப்பை அந்த விதிமுறைகள் மேலும் கடுமையாக்கும்,” என்றார் அவர்.
‘பாரத் பாசுதன்’ இணையத்தளம் மூலம் மின்னிலக்க முறையில் அறிக்கை அளிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாகும்.
அந்த உத்தேச விதிமுறைகளின்கீழ், ஒரு கிராம அலுவலர், நோய்ப் பரவல் சந்தேகங்கள் அல்லது பாதிக்கப்பட்ட விலங்குகள் குறித்து ஒரு கால்நடை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
அவர் பின்னர் மாநில, மத்திய அரசுகளுக்குத் தகவல் தெரிவிப்பார். தடுப்பூசி போடுதல், சான்றளித்தல் ஆகியவையும் அந்த இணையத்தளம் மூலம் பதிவு செய்யப்படும் என்று அந்த அதிகாரி கூறினார்.


