திருப்பதி: ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் அல்லூரி சீதாராம ராஜூ மாவட்டத்தைச் சேர்ந்த சம்புண்வரம் பகுதியில் முளைத்த அதிசயக் காளானைப் பொதுமக்கள் வழிபட்டதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அந்தக் காளான் இரண்டு அடி உயரம், மூன்று அடி அகலத்தில் மூன்று அடுக்குகளைக் கொண்டிருந்தது.
சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மக்கள் அதைப் பார்த்துச் சென்றனர்.
இந்நிலையில், பெண்கள் சிலர் அதிசயக் காளானுக்கு மஞ்சள், குங்குமம் வைத்து பூஜை செய்து வழிபட்டதாகக் கூறப்படுகிறது.
உலகில் ஏறத்தாழ 103 வகையான ஒளி உமிழும் அரிய வகைக் காளான்கள் இருப்பதாகவும் இவற்றில் ஏழு வகைக் காளான்கள் இந்தியாவில் காணப்படுவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இந்த வகைக் காளான்களின் வித்துகள், ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குப் பரவுவதற்கு உதவும் வகையில் பூச்சிகளையும் பிற உயிரினங்களையும் கவர்வதற்காக ஒளி உமிழும் தன்மையைப் பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.
ஆந்திராவில் அண்மையில் காணப்பட்ட அதிசயக் காளான் ஒளி உமிழக்கூடியதா என்பது பற்றித் தெளிவான தகவல் இல்லை.

