புதுடெல்லி: இந்தியத் தலைநகரில் தொடர்ந்து நான்காவது நாளாகக் காற்றின் தரம் ‘கடுமை’ எனும் பிரிவில் இருக்கும்வேளையில், மக்கள் உடல்நலச் சிக்கல்களால் அவதியுறுகின்றனர்.
காற்று மாசுத் தடுப்பு நடவடிக்கைகளை டெல்லி அரசு மேற்கொண்டபோதும், சனிக்கிழமை (நவம்பர் 16) தொடர்ந்து நான்காவது நாளாக காற்றின் தரம் மோசமாகப் பதிவாகியுள்ளது.
சனிக்கிழமை காலை 8 மணி (இந்திய நேரம்) நிலவரப்படி, டெல்லியில் காற்றின் தரக் குறியீடு(AQI) 406ஆகப் பதிவானது.
இதனால் நகரின் பெரும்பாலான பகுதிகளில் புகைமூட்டமாகக் காணப்படுகிறது. சாலைகளில் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாயினர். மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் தற்போதுள்ள காற்று மாசு, 25-30 சிகரெட்டுகளைப் புகைப்பதற்குச் சமம் என்று கூறப்படுகிறது.
காற்று மாசைக் குறைக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அதிகாரிகளுக்கு டெல்லி சுகாதார அமைச்சர் கோபால் ராய் உத்தரவிட்டுள்ளார்.
காற்று மாசினால் இருமல், தொண்டைக் கரகரப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படுள்ளதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். மருத்துவமனைகளிலும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
அவசியமின்றி மக்கள் வெளியே வரவேண்டாம் என்றும் வெளியே செல்வோர் முகக்கவசம் அணியும்படியும் சுகாதார வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
பாகிஸ்தானின் லாகூருக்கு அடுத்தபடியாக உலக அளவில் காற்று மாசு அதிகமுள்ள நகரமாக டெல்லி உள்ளது.
முறையாகச் சுத்திகரிக்கப்படாத தொழில்துறைக் கழிவுகள், கழிவுநீர் வெளியேற்றம், வாகனப் புகை, அண்டை மாநிலங்களில் பயிர்க் கழிவுகளை எரிப்பது போன்றவை அதற்குக் காரணமாகக் கூறப்படுகின்றன.