புதுடெல்லி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் யாரெல்லாம் பலனடைகிறார்கள் என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.
மக்களின் பணம் தவணை முறையில் கொள்ளை அடிக்கப்படுவதாக அவர் தமது சமூக ஊடகப் பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு காலத்தில் அனைத்துலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மிகவும் குறைவாக இருந்தது என்றும் அந்தக் காலத்தில் இந்தியாவில் அதன் விலை குறைக்கப்படவில்லை என்றும் திரு கார்கே சுட்டிக்காட்டியுள்ளார்.
அப்போதும்கூட மக்களின் பணம் பகிரங்கமாக கொள்ளை அடிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இப்போதும் பெட்ரோல் விலை நூறு ரூபாயைக் கடந்துவிட்டது எனத் தெரிவித்துள்ளார்.
இத்தாலி, ஆஸ்திரேலியா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கலால் வரியைக் குறைத்து, பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்தி உள்ளதாகவும் பிரிட்டன், அயர்லாந்து நாடுகளில் எரிசக்திக்காக சிறப்பு மானிய உதவிகள் வழங்கப்படுவதாகவும் திரு கார்கே தமது பதிவில் கூறியுள்ளார்.
“அண்மையில் ஐந்து மாநிலச் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்றன. தேர்தல் முடிந்த உடனேயே பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியது. கடந்த பத்து நாள்களில் மூன்று முறை விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் யாரெல்லாம் பலன் அடைகிறார்கள் என்பது குறித்து விளக்க வேண்டியது பிரதமரின் பொறுப்பு,” என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

