சண்டிகர்: உயிருடன் புதைக்கும் சாகச நிகழ்ச்சியில் பங்கேற்ற ஹரியானா மாநில இளையர் ஒருவர் மூச்சுத்திணறி உயிரிழந்தார்.
ஹரியானா மாநிலம் நூஹ் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தீபக். 27 வயதான இவர், அவ்வப்போது தனது குழுவினருடன் சுற்றுவட்டாரக் கிராமங்களுக்குச் சென்று சாகச நிகழ்ச்சிகளை நடத்துவது வழக்கம்.
கடந்த 15 ஆண்டுகளாக இத்தகைய அனுபவத்தைப் பெற்றுள்ள அவர், ஜூலை 23ஆம் தேதி நூஹ் மாவட்டத்திலுள்ள கோரி கிராமத்துக்குத் தனது குழுவினருடன் சென்றிருந்தார். அங்கு பல்வேறு சாகச நிகழ்ச்சிகளை அரங்கேற்றிய பின்னர், இறுதியாக உயிருடன் புதைக்கப்படும் சாகசத்திற்குத் தயாரானார் தீபக்.
ஒரு சாக்குப்பைக்குகள் அமரவைத்து பெரிய குழி ஒன்றில் உயிருடன் இறக்கப்பட்டார் தீபக். பிறகு மண்ணைக்கொண்டு அந்த குழி மூடப்பட்டது.
மூன்று நாள்களுக்குப் பிறகு அக்குழியில் இருந்து வெளியே வருவதுதான் அவரது சாகசங்களின் உச்ச நிகழ்வு.
ஆனால், இம்முறை சாகச நிகழ்வு சோகத்தில் முடிந்தது.
அவரைக் குழிக்குள் இருந்து மீட்கப்பட்டபோது அசைவின்றிக் காணப்பட்டார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அவர் முன்பே மூச்சுத்திணறலால் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

