உடுப்பி: கர்நாடகாவில் போலியான வாடகைக் கார் இணையத் தளத்தில் வாடகைக் காரைப் பெறுவதற்குப் பதிவு செய்த நபர் தனது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.4.1 லட்சத்தை இழந்துள்ளார்.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் கர்நாடகா மாநிலம், உடுப்பியில் உள்ள வாடகைக் கார் இணையத் தளங்களைக் கூகலில் தேடியுள்ளார். அப்போது அவரின் கண்ணில் தென்பட்ட சக்தி வாடகைக் கார் இணையத் தளத்தின் தொலைபேசி எண்ணிற்கு அழைத்துள்ளார்.
அவரிடம் பேசிய நபர், எங்கள் இணையத் தளத்தில் 150 ரூபாய் செலுத்தி காரை முன்பதிவு செய்து கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
அவரும் தனது ரொக்க அட்டை மற்றும் கடன் அட்டைகளை உபயோகித்து பணம் செலுத்த முயன்றுள்ளார். ஆனால், அவரால் பணம் செலுத்தமுடியவில்லை. அப்போதுதான் அவரது வங்கிக் கணக்கில் இருந்து லட்சக்கணக்கில் பணம் எடுக்கப்பட்டுள்ளதாக அவருக்கு வங்கியில் இருந்து குறுஞ்செய்தி வந்துள்ளது.
எஸ்.பி.ஐ. கடன் அட்டையில் இருந்து ரூ.3.3 லட்சமும் கனரா வங்கி ரொக்க அட்டையில் இருந்து 80,056 ரூபாயும் என மொத்தமாக 4.1 லட்சம் ரூபாயை அவர் இழந்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிந்துள்ள உடுப்பி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

