புதுடெல்லி: இந்தியாவில் இருந்து பல்வேறு காலகட்டங்களில் அமெரிக்காவுக்குக் கடத்தப்பட்ட ஏறக்குறைய 3,000 சிலைகளை மீட்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர் தொடுத்திருந்தார்.
அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சிலைக் கடத்தல் தொடர்பாக தமிழகத்தில் 38 காவல் நிலையங்களில் இருந்த 41 ஆவணங்கள், குறுந்தகடுகள் எவ்வாறு மாயமாகின என்றும் இதுதொடர்பாக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் கேள்வி எழுப்பியது.
சிலைகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை எனப் பல வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அதற்கு என்ன காரணம் என்று கேள்வி எழுப்பியதோடு இதுகுறித்து விசாரிக்க சிறப்பு அதிகாரியை நியமிக்க உத்தரவிட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்தியாவில் இருந்து 3,000க்கும் மேற்பட்ட சிலைகள், பழங்காலக் கலைப்பொருள்கள் அமெரிக்காவுக்குக் கடத்திச் செல்லப்பட்டு அங்குள்ள அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
இத்தகவலை அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவு வெளியிட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த புதிய மனு ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, பஞ்சலோக செம்பியன் மாதேவி, திருஞானசம்பந்தர், கால பைரவர், மகாவீரர், புத்தர் சிலைகள் உள்ளிட்டவையும் விலைமதிப்பற்ற சிவசக்தி ருத்ராட்ச மாலை, பழங்கால கலைப்பொருள்களும் அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டுள்ளன.
அதுபோல, மகாராஜா போஜாவால் நிறுவப்பட்ட 11ஆம் நூற்றாண்டின் பளிங்குக் கல்லாலான சரஸ்வதி தேவி சிலையானது, இங்கிலாந்து நாட்டில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சிலைகளையும் கலைப்பொருள்களையும் மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்க இந்திய உள்துறை அமைச்சு, கலாசார அமைச்சுக்கு உத்தரவிட வேண்டுமென வழக்கறிஞர் ராஜேந்திரன் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

