புதுடெல்லி: இரண்டு வாரங்களில் நான்காவது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது இந்தியக் குடிமக்களுக்கு கடும் அதிர்ச்சி அளித்துள்ளது.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள்வசம் உள்ளது.
இந்நிலையில், கடந்த பத்து நாள்களுக்கு முன்பு அனைத்துலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதைக் குறிப்பிட்டு, பெட்ரோல் விலை கடந்த மே 15ஆம் தேதி மூன்று ரூபாய் உயர்த்தப்பட்டது.
அதையடுத்து, மே 19, 23ஆம் தேதிகளில், மீண்டும் குறிப்பிடத்தக்க அளவில் விலை உயர்த்தப்பட்டது.
இந்நிலையில், இரண்டு வாரங்களில் நான்காவது முறையாக ஞாயிற்றுக்கிழமை (மே 24) பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது.
இம்முறை லிட்டருக்கு ரூ. 2.46 அதிகரிக்கப்பட்டு, சென்னையில் பெட்ரோல் விலை ரூ. 107.77ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லி, மும்பை, கோல்கத்தாவிலும் பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சம் பெற்றுள்ளன.
எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் அறிவித்துவரும் இந்த விலை உயர்வு, சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்புடைய செய்திகள்
காய்கறிகள், பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ள நிலையில், இந்தியாவின் மொத்தப் பணவீக்கம் அதிகரிக்கும் என்றும் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

