சென்னை: துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தின் மீது லேசர் ஒளி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துபாயில் இருந்து 326 பயணிகளுடன் எமிரேட்ஸ் நிறுவனத்தின் விமானம் இம்மாதம் 26ஆம் தேதி சென்னை விமான நிலையம் வந்தது. அப்போது, பரங்கிமலையில் இருந்து விமானத்தின் மீது லேசர் ஒளி அடிக்கப்பட்டது.
அதனால் அதிர்ச்சிக்குள்ளான விமானி, ஏதோ தவறாக இருப்பதை உணர்ந்து, சாமர்த்தியமாக செயல்பட்டு, விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார்.
இதையடுத்து, விமானி அளித்த தகவலின் பேரில், லேசர் ஒளி பாய்ந்தது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விமான நிலைய சுற்றுவட்டாரப் பகுதிகளில் காவலர்கள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

