புதுடெல்லி: இந்தியாவின் சுதந்திர நாளையொட்டி மிகப்பெரிய தாக்குதலை நடத்தத் திட்டமிட்டிருந்த ஐஎஸ்ஐ அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாதக் குழுவைச் சேர்ந்த 253 பேர் கைது செய்யப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானை மையமாகக்கொண்ட ‘ஷஹ்சாத் பட்டி நெட்வொர்க்’ என்ற பயங்கரவாத அமைப்பு சுதந்திர நாளன்று நாடு முழுவதும் கையெறி குண்டு, ஐஇடி குண்டு, பெட்ரோல் குண்டு உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி மிகப்பெரிய தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தது.
காவல்துறை பாதுகாப்பு, மத வழிபாட்டுத் தலங்களைக் கண்காணிக்கவும், உளவு பார்ப்பதற்காகவும் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தும் உள்ளூர் ஆட்களுக்கு அந்த அமைப்பு பணம் வழங்கி, திட்டமிட்டு வந்தது.
இந்திய உளவுத்துறையின் தகவலைத் தொடர்ந்து, நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்புப் படைகளின் நடவடிக்கைகள் மூலம் ஆகஸ்ட் 12ஆம் தேதி ஒரே நாளில் 253 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள செய்தியில் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
14 மாநிலங்களில் பல்வேறு இடங்களில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு இந்தியப் பாதுகாப்புப் படைகள் அக்கட்டமைப்பைச் சிதைத்தன.
உத்தரப் பிரதேசத்தில் 62, ஹரியானாவில் 52, டெல்லியில் 51, பஞ்சாபில் 44, ராஜஸ்தானில் 15, மகாராஷ்டிரத்தில் 8, உத்தராகண்டில் 5, கர்நாடகம், பீகார், குஜராத்தில் தலா 3, தெலுங்கானா, இமாச்சலப் பிரதேசம், ஜம்மு - காஷ்மீர், கேரளாவில் தலா 2 என 253 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அமித்ஷா குறிப்பிட்டார்.
ஐஎஸ்ஐ அமைப்பின் நிதியுதவி பெற்ற அக்குழுவிடமிருந்து அடையாள அட்டைகள், பாகிஸ்தான் ஆயுதத் தொழிற்சாலை முத்திரைகள் கொண்ட கையெறி குண்டுகள், கைத்துப்பாக்கிகள், தோட்டாக்கள், உளவு பார்ப்பதற்கான சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்ட பொருள்கள் கைப்பற்றப்பட்டதாக அவர் கூறினார்.
அவர்களுக்கு எதிராக உபா, பிஎன்எஸ் ஆயுதத் தடுப்புச் சட்டம், என்டிபிஎஸ் சட்டம் ஆகியவற்றின்கீழ் 80க்கும் மேற்பட்ட முதல் தகவல் அறிக்கைகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.


