மும்பை: இரண்டு ஏர் இந்தியா விமானங்கள் ஒரே ஓடுபாதையில் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்ட சம்பவம் மும்பை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) இரவு 10 மணியளவில் நிகழ்ந்தது என ஊடகத் தகவல்கள் தெரிவித்தன. அவ்வேளையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று தரையிறங்கிய பின்னர் ஓடுபாதையிலேயே நின்றிருந்தது.
மும்பையிலிருந்து டெல்லி செல்லும் ஏர் இந்தியா விமானம் ஒன்றும் அதே ஓடுபாதையிலிருந்து புறப்படத் தயாராகி இருந்தது.
இதைக் கவனித்த வான்வழிப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளரின் அறிவுறுத்தலின்பேரில் ஏர் இந்தியா விமானத்தின் விமானி தனது விமானத்தை அந்த ஓடுபாதையில் தொடர்ந்து செலுத்துவதை நிறுத்தினார்.
அவர் மீண்டும் விமானங்களை நிறுத்தும் இடத்திற்கு அந்த விமானத்தைத் திருப்பியதையடுத்து, விபத்து தவிர்க்கப்பட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரு விமானங்களிலும் இருந்த பயணிகளின் எண்ணிக்கை, புறப்படவிருந்த விமானம் மீண்டும் எப்போது புறப்பட்டுச் சென்றது என்பது உள்ளிட்ட விவரங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை.

