புதுடெல்லி: இனி அரசு நிகழ்ச்சிகளில் இந்திய தேசிய கீதத்திற்கு முன்னதாக ‘வந்தே மாதரம்’ பாடலைப் பாடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை வெளியிட்ட உள்துறை அமைச்சு, வந்தே மாதரம் பாடலை இசைப்பதற்கான புதிய விதிமுறைகளையும் வகுத்துள்ளது.
‘வந்தே மாதரம்’ பாடல் இசைக்கப்படும்போது நிகழ்ச்சிக்கு வந்துள்ள பார்வையாளர்கள் அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்றும் அதிபர், ஆளுநர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளின் தொடக்கம், முடிவில் இப்பாடல் இசைக்கப்பட வேண்டும் என்றும் இந்திய உள்துறை அமைச்சு தெரிவித்தது.
வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடும் விதமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரசு வானொலி, தொலைக்காட்சிகளில் அதிபர் உரைக்கு முன்பும் இறுதியிலும் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட வேண்டும் என உள்துறை அமைச்சு மேலும் கூறியுள்ளது.

