புதுடெல்லி: மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு மாற்றாக வாக்குச்சீட்டு மூலம் தேர்தல் நடத்த கோரும் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தெலுங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ மத போதகர் கே ஏ பால் கடந்த 2008ஆம் ஆண்டில் பிரஜா சாந்தி என்ற கட்சியை தொடங்கினார். இவர் உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், மின்னணு இயந்திரங்களுக்கு மாற்றாக வாக்குச்சீட்டு மூலம் தேர்தல் நடத்த வேண்டும். தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம், மதுபானம் வழங்கும் வேட்பாளர்கள் 5 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும். தேர்தல் வன்முறையைத் தடுத்து, கட்சிகள் நன்கொடை பெறுவதை சீரமைக்க கோரினார்.
இந்த மனு நீதிபதிகள் விக்ரம்நாத், பி.பி.வரலே அமர்வு முன்னர் விசாரணைக்கு வந்தது. அப்போது கே.ஏ.பால் நேரில் முன்னிலையாகி வாதிட்டார். அப்போது வாக்குச்சீட்டு நடைமுறை கோரிக்கைக்கு ஓய்வுபெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், ஓய்வுபெற்ற நீதிபதிகள் சுமார் 180 பேர் ஆதரவு அளிக்கின்றனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியும் என்று அமெரிக்க தொழிலதிபரும் தொழில்நுட்ப நிபுணருமான எலான் மஸ்க் கூறியிருக்கிறார். இதைப் பரிசீலிக்க வேண்டும் என்றார்.
இது குறித்துப் பேசிய நீதிபதிகள் விக்ரம் நாத், பி.பி.வரலே, தேர்தலில் வெற்றி பெறும் கட்சிகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து எந்தப் புகாரும் செய்வதில்லை. அதேநேரம் தேர்தலில் தோல்வியை தழுவும் கட்சிகள் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் மோசடி செய்யப்பட்டிருப்பதாக புகார் தெரிவிக்கின்றன.
ஆந்திப் பிரதேசத்தைப் பொறுத்தவரை சந்திரபாபு நாயுடு தேர்தலில் தோல்வி அடைந்தபோது மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் மீது புகார் கூறினார். ஆனால், சமீபத்தில் நடந்த ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி தோல்வி அடைந்திருக்கிறார். இப்பொழுது அவர் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் குறித்து புகார் கூறுகிறார்.
சமூக சேவையில் ஈடுபட்டிருப்பதாக கூறும் நீங்கள் ஏன் அரசியல் களத்துக்குள் நுழைகிறீர்கள் என்று கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.