புதுடெல்லி: புதுடெல்லியிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்த பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ (ISI) உளவு அமைப்பின் சதித்திட்டத்தை உத்தரப் பிரதேச சிறப்புப் பிரிவு காவல் படையினர் முறியடித்துள்ளனர்.
ஷேசாத் பாட்டி தலைமையிலான கும்பல் அந்தச் சதித்திட்டத்திற்குக் காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
டெல்லியின் வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில்கள், காவல் நிலையங்கள், ஹரியானா ராணுவ முகாம்கள், டெல்லி - சோனிபட் நெடுஞ்சாலையில் உள்ள மக்கள் நடமாட்டம் மிகுந்த உணவகங்களை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தது உளவுத்துறை மூலம் தெரியவந்தது.
இது தொடர்பாக கடந்த மார்ச் 31ஆம் தேதி வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
முதற்கட்டமாக, கடந்த ஏப்ரல் மாதம் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ராஜ்வீர், விவேக் பஞ்சரா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து நடைபெற்ற அதிரடிச் சோதனையில், மே 7 ஆம் தேதி பல்வேறு மாநிலங்களில் மேலும் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர்.
பாகிஸ்தான் உளவு அமைப்பின் தூண்டுதலின் பேரில் நடத்தப்படவிருந்த பயங்கரவாதச் செயல் முறியடிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் நிழல் உலக தாதாவும், ஐஎஸ்ஐ அமைப்பின் முகவருமான ஷேசாத் பாட்டியின் நேரடி வழிகாட்டலில் இவர்கள் செயல்பட்டு வந்துள்ளனர்.

