வாரணாசி: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தமது நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசியில் புதிதாகத் திறக்கப்பட்ட சாலையை ஆய்வுசெய்தார்.
இருநாள் பயணமாக வியாழக்கிழமை (பிப்ரவரி 22) வாரணாசி சென்ற பிரதமர் மோடி, இரவு நேரத்தில் ஷிவ்பூர் - புல்வாரியா - லகர்தரா சாலையை ஆய்வுசெய்தார்.
அவருடன் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் சென்றார்.
மொத்தம் ரூ.360 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள அச்சாலையால், பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தில் இருந்து வாரணாசி விமான நிலையத்திற்குச் செல்ல முன்னர் 75 நிமிடங்கள் தேவைப்பட்ட நிலையில், இப்போது 45 நிமிடங்களில் சென்றுவிடலாம்.
தமது இருநாள் பயணத்தின்போது வாரணாசியில் ரூ.14,000 கோடிக்கும் மேற்பட்ட திட்டங்களுக்குத் திரு மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

