ஐபிஎல் எனப்படும் இந்திய பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டி தற்போது நடந்து வருகிறது.
இம்முறை சென்னை சேப்பாக்கம் விளையாட்டு அரங்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடும் ஆட்டங்களுக்கு நுழைவுச் சீட்டுகள் கிடைப்பது குதிரை கொம்பாக உள்ளது.
வரும் மே 6 ஆம் தேதி நடைபெறும் சென்னை - மும்பை அணிகள் மோதும் போட்டிக்கு நுழைவுச்சீட்டுகள் விற்பனை புதன்கிழமை (மே 3) விற்கப்பட்டன.
நுழைவுச்சீட்டுகள் வாங்க செவ்வாய்க்கிழமை இரவு முதலே ரசிகர்கள் விளையாட்டு அரங்கிற்கு வெளியே வரிசையில் நிற்கத் தொடங்கினர்.
இந்நிலையில் காலையில் அத்துமீறி வரிசையில் நுழைய முயன்றவர்களை காவல் துறையினர் விரட்டியடித்தனர்.
சில ரசிகர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
குறைந்தபட்ச 1,500 ரூபாய் நுழைவுச் சீட்டுகள் விளையாட்டு அரங்கில் மட்டும் தான் விற்பனை செய்யப்படும். இணையத்தில் 2,500 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரையிலான நுழைவுச்சீட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது.
நுழைவுச் சீட்டு விற்பனை நேர்மையாக நடப்பதில்லை என்று ரசிகர்கள் பலர் சமூக ஊடகங்களில் குறைகூறியுள்ளனர்.