கவுகாத்தி: அசாம் மாநிலம் சில்சாரில் இருக்கும் தேசியக் கல்வி நிலையமான ‘என்ஐடி’யில் படித்துவந்த பங்ளாதேஷிய மாணவி ஒருவர், சமூகத்தளங்களில் இந்தியாவுக்கு எதிரான பதிவுகளுக்கு ‘லைக்’போட்டு வந்தார்.
இந்தக் காரணத்தால், அவர் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2021ஆம் ஆண்டு முதல் சில்சாரில் இருக்கும் என்ஐடியில் பங்ளாதேஷைச் சேர்ந்த அந்த மாணவி படித்து வந்தார்.
இவர் முகநூலில், இந்தியாவுக்கு எதிரான பதிவுகளுக்குத் தொடர்ந்து உகந்த கருத்து என்பதைக் குறிக்கும் ‘லைக்’ குறியீட்டைப் பதிவிட்டு வந்துள்ளார்.
இந்த விவகாரம், ‘என்ஐடி’ கல்வி நிலையத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.
இதனையடுத்து, அந்த மாணவி இந்தியாவை விட்டு வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆகஸ்ட் 26ஆம் தேதி காலை அந்த மாணவி முழு பாதுகாப்புடன் இந்தியா- பங்ளாதேஷ் அனைத்துலக எல்லையான கரீம்கஞ்ச் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்நிலையில், அந்த மாணவி சொந்த நாடு செல்ல விரும்பியதாக ‘என்ஐடி’ நிர்வாகம் தெரிவித்தது.

