திருச்சி: லால்குடி அருகே கடையின் மேல்பகுதியில் ‘பிளக்ஸ் பேனர்’ வைக்கும்போது மின்சாரம் பாய்ந்து புது மாப்பிள்ளை பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
லால்குடி அருகே கடையின் மேல்பகுதியில் ‘பிளக்ஸ் பேனர்’ வைக்கும்போது மின் கம்பியின் மீது உரசியதால் மின்சாரம் பாய்ந்து புது மாப்பிள்ளை பலியாகி உள்ளார். இது தொடர்பாக காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேக்கரி கடையின் மேல் பகுதியில் கடையின் பெயர் பொறிக்கப்பட்ட புதிய ‘பிளக்ஸ் போர்ட்’ வைக்கும் பணியில் சக்திவேல் ஈடுபட்டிருந்தார்.
அப்போது பிளக்ஸ் போர்டில் இருந்த இரும்புக் கம்பி கடையின் மேலே சென்ற மின் கம்பியின்மீது உரசியுள்ளது. அதனால் பிளக்ஸ் போர்டை பிடித்துக் கொண்டிருந்த சக்திவேலின் மீது திடீரென மின்சாரம் பாய்ந்தது.
இந்தச் சம்பவத்தில் சக்திவேல் படுகாயம் அடைந்து கீழே விழுந்தார். இதனைக்கண்டு அங்கிருந்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சக்திவேலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே திருமணம் முடிந்து ஆறு மாதங்களே ஆன சக்திவேல் உயிரிழந்தார்.

