பெங்களூரு: வீட்டுப் பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் கர்நாடக முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா, 34, முதல் நாள் சிறையில் கதறி அழுதாகத் தகவல் வெளியாகியது.
அந்த வழக்கில் அவருக்கு சாகும் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய பிரஜ்வல் ரேவண்ணா தரப்பு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், சிறைத் துறை அதிகாரிகள் அவர் சிறையில் அடைக்கப்பட்டதை உறுதிப்படுத்தினர்.
“பிரஜ்வல் ரேவண்ணா பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு கைதி எண் 15528 வழங்கப்பட்டுள்ளது.
“சென்ற 2ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், தண்டனைக்கான முதல் இரவை அவர் சிறையில் கழித்தார். கண்ணீர் விட்டு அழுததுடன், மிகுந்த மன உளைச்சலுடன் காணப்பட்டார். அவரது உடல்நிலை சீராக இருப்பதை உறுதி செய்வதற்காக சிறை மருத்துவர்கள் அன்று இரவு அவரது உடல்நிலையைப் பரிசோதித்தனர்.
“அப்போது, தனது வேதனைகளை மருத்துவர்களிடம் அவர் வெளிப்படுத்தியுள்ளார். இந்தத் தண்டனையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளதாகவும் பிரஜ்வல் ரேவண்ணா கூறியுள்ளார்,” என்று சிறை அதிகாரிகள் கூறினர்.
“முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதால் தற்போது அவர் உயர் பாதுகாப்பு அறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
“கைதிகளுக்கு உரிய ஆடை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு அதிகாரபூர்வமாக கைதி எண் 15528 ஒதுக்கப்பட்டது,” என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

