அதிபரின் உரை இப்படி இருந்திருக்கக் கூடாது: ராகுல் காந்தி

அதிபரின் உரை இப்படி இருந்திருக்கக் கூடாது: ராகுல் காந்தி

1 mins read
f3d6eaf0-e207-4ec5-93f0-d4fae9e53d49
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி தொடங்கியது. நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் அதிபர் திரெளபதி முர்மு அன்று கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார்.

அதை தொடர்ந்து அதிபர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தற்காக நாடாளுமன்றம் திங்கட்கிழமை (பிப்ரவரி 3) கூடியது.

மக்களவையில் அதிபர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “கடந்த முறையும் அதற்கு முந்தைய முறையும் கூறப்பட்ட விஷயங்களையே கிட்டத்தட்ட இந்தமுறையும் அதிபர் உரையில் கேட்டேன். அதிபரின் உரை இப்படி இருந்திருக்கக் கூடாது.

“நாட்டின் வளர்ச்சி மெதுவாக உள்ளது. உற்பத்தித் துறையில் இந்தியா பின் தங்கியுள்ளது. வேலையில்லாத் திண்டாட்டத்தை நம்மால் சமாளிக்க முடியவில்லை என்பதுதான் நாம் எதிர்கொள்ளும் உலகளாவிய பிரச்சினை.

“தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு இந்த நாட்டின் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது குறித்து தெளிவான பதிலை அளிக்கவில்லை. வேலையின்மை பிரச்சினைக்குத் தீர்வு காண பிரதமர் மோடி தவறிவிட்டார். வேலையில்லா திண்டாட்டத்தைச் சமாளிக்க முடியாமல் மத்திய அரசு திணறி வருகிறது. இளைஞர்களுக்கு எந்த ஒரு திட்டமும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை,” என்று தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்