புதுடெல்லி: சுதந்திர தினத்தை முன்னிட்டு, காவல்துறை, தீயணைப்புத் துறை, ஊர்க்காவல் படை, குடிமைப் பாதுகாப்பு, சீர்திருத்தப் பணிகள் ஆகியவற்றைச் சேர்ந்த மொத்தம் 1,057 பணியாளர்களுக்கு வீரதீரச்செயல், சேவைக்கான பதக்கங்களை மத்திய உள்துறை அமைச்சு சனிக்கிழமை (ஆகஸ்ட் 14) வெளியிட்டது.
இந்திய அளவில் ஆண்டுக்கு இருமுறை அதிபர் பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.
காவல்துறையினருக்கு அவர்களின் நன்மதிப்பு, செயல்பாடு, சாதனைகளின் அடிப்படையில் விருதுகள் அளிக்கப்படுகின்றன.
நாடு முழுவதிலும் இருந்து அதிபரின் தகைசால் பணிக்கான பதக்கத்துக்கு 92 பேரும் வீரதீரச் செயலுக்கான பதக்கத்துக்கு 301 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
உள்துறை அமைச்சின் சிறந்த பணிக்கான பதக்கத்துக்கு 664 பேர் தேர்வாகியுள்ளனர். இதில் 272 காவல்துறைப் பணியாளர்களுக்கும், 29 தீயணைப்புத் துறைப் பணியாளர்களுக்கும் வழங்கப்படுகின்றன.
இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் ஜே. விஜய் ஆனந்த், கே.ராமச்சந்திரன், உதவி கமாண்டன்ட் எஸ்.குமார் ஆகிய மூவருக்கும் அதிபர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தைச் சேர்ந்த 17 அதிகாரிகளுக்குச் சிறந்த பணிக்கான பதக்கம் அறிவிக்கப்பட்டு பெருமை சேர்க்கப்பட்டுள்ளது.


