புதுடெல்லி: உலகில் எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடையைச் சமாளிக்கும் வகையில் மாற்று எரிசக்தி மூலங்களை இந்தியா ஆராய வேண்டும் என்று அந்நாட்டுப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
சமையல் எரிவாயுவுக்குப் பதிலாக உயிர்வாயுவைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போராலும் ஹோர்முஸ் நீரிணை முற்றுகையாலும் வளைகுடாவிலிருந்து இந்தியாவிற்கான கச்சா எண்ணெய் விநியோகத்தில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஐந்து நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்துகொண்டு பிரதமர் நரேந்திர மோடி நாடு திரும்பிய நிலையில், வியாழக்கிழமை (மே 21) மாலை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
கிட்டத்தட்ட நான்கு மணிநேரம் நடைபெற்ற அக்கூட்டத்தில் மத்திய கிழக்குப் போரினால் ஏற்பட்ட எரிசக்தி நெருக்கடி பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியது குறித்து தமது அமைச்சரவைக் குழுவுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
இந்தியாவும், ஐக்கிய அரபுச் சிற்றரசுகளும் பெட்ரோலிய இருப்பு தொடர்பாக ஒரு முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதன்படி, ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனம் (அட்னாக்) இந்தியாவின் பெட்ரோலிய இருப்பை அதிகரிக்கும்.
இது தவிர, திரவ சமையல் எரிவாயு விநியோகம் குறித்தும் ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது பற்றியும் ஆலோசனை நடத்தினர். மேலும், வழக்கமான எரிசக்தி மூலங்களுக்கு அப்பாற்பட்டு மாற்று எரிசக்தி மூலங்களை அவசரமாக ஆராயுமாறு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.

