சென்னை: தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக - பாஜக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைந்துள்ளது. இக்கூட்டணியின் சார்பில், கடந்த ஜனவரி 23ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் முதல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார்.
இதைத் தொடர்ந்து, வரும் பிப்ரவரி 28ஆம் தேதி மதுரையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இரண்டாவது பிரசாரக் பொதுக்கூட்டம் நடைபெறும் என்றும், இதில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றுவார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பிப்ரவரி 28ல் மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்க இருந்த இக்கூட்டம், மார்ச் 1ஆம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே மதுராந்தகத்தில் கடந்த மாதம் 23ஆம் தேதி நடைபெற்ற கூட்டமும், முதலில் மதுரையில் நடைபெறுவதாகத்தான் அறிவிக்கப்பட்டது. ஆனால், எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளில் ஏற்பட்ட தாமதம் உள்ளிட்ட காரணங்களால் அது மதுராந்தகத்திற்கு மாற்றப்பட்டது.
அதைத் தொடர்ந்து, பிப்ரவரி 28ல் மதுரை மண்டேலா நகரில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட கூட்டமும் தற்போது திடீரென மார்ச் 1ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

