மதுரை: பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 23ஆம் தேதி தமிழகம் வருவதாகவும் மதுரையில் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான முதல் பொதுக்கூட்டம் மதுரை பாண்டிகோவில் அருகே உள்ள அம்மா திடலில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
அந்த இடத்தை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும் கூட்டணியில் உள்ள அதிமுக எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஆகியோரும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், “பிரதமர் மோடி வருகையின்போது தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியினர் பங்கேற்கும் மாபெரும் ஊர்வலமும் பொதுக்கூட்டமும் நடைபெறவுள்ளன. கூட்டம் நடைபெறும் இடம் இன்னும் உறுதியாகவில்லை. ஒருவேளை மதுரை தேர்ந்து எடுக்கப்பட்டால் பாண்டிகோவில் அம்மா திடலில் கூட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது,” என்றார்.
“கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமியும் அமித்ஷாவும் முடிவு செய்வார்கள். பாமக அன்புமணியோடு கூட்டணி வைத்துள்ளோம்.
“விஜய்க்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என பாஜகவுக்கு எந்த அவசியமும் இல்லை. காங்கிரஸ் கட்சி செய்வதையெல்லாம் நாங்கள் செய்யமாட்டோம். திமுக அகற்றப்பட வேண்டும் என்பது மட்டுமே எங்களுடைய நோக்கம்.
“கூட்டணி ஆட்சி என நாங்கள் சொல்லவில்லை. பாஜக 56 தொகுதிகள், 3 அமைச்சர்கள் கேட்கிறார்கள் என்பது வதந்தி,” என்றார் நயினார் நாகேந்திரன்.

