காங்கிரஸ் கட்சி சார்பில் வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிடுவதால் அங்கு குடும்பத்துடன் சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார் பிரியங்கா காந்தி.
வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்னதாக கல்பேட்டா சாலையில் வாகன அணிவகுப்பு நடத்தினார். அப்போது காங்கிரஸ் கூட்டத்தில் உரையாற்றிய பிரியங்கா காந்தி, “35 ஆண்டுகளாக பிரசாரம் செய்து வருகிறேன். 17 வயதில் எனது தந்தைக்காக வாக்கு சேகரித்தேன்.
“பலமுறை கட்சி நிர்வாகிகளுக்காக பரப்புரை செய்துள்ளேன். முதல் முறையாக எனக்காக பரப்புரை செய்கிறேன்.
“உங்களுக்கு சேவையாற்ற எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். உண்மையும் அகிம்சையும் எனது சகோதரர் ராகுல் காந்தியை அன்பிற்காகவும் ஒற்றுமைக்காகவும் இந்தியா முழுவதும் 8,000 கிமீ நடைபயணம் மேற்கொள்ளத் தூண்டியது.
உங்கள் ஆதரவு இல்லாமல் அவரால் அதைச் செய்திருக்க முடியாது. நீங்கள் அவருடன் இருந்தீர்கள். தொடர்ந்து போராடுவதற்கு உங்கள் பலத்தையும் தைரியத்தையும் கொடுத்தீர்கள்,” என்று கூறினார்.
2024 மக்களவைத் தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி ஆகிய இரண்டு தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிட்டார். இதில் இரண்டிலும் ராகுல் காந்தி வெற்றி பெற்றார். தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி ஒரு தொகுதியில் மட்டுமே எம்.பியாக, எம்.எல்.ஏவாக இருக்க முடியும்.
அதனால் வயநாடு தொகுதி எம்.பி பதவியை ராஜினாமா செய்தார். பெரோஸ் காந்தி, இந்திரா காந்தி, சோனியா காந்தி என பாரம்பரியமாக காங்கிரஸ் கோட்டையாகத் திகழும் ரேபரேலி தொகுதியை தக்க வைத்துக் கொண்டார்.
இதனால் வயநாடு தொகுதி காலியானது. இதையடுத்து இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அந்த இடத்தில் நிற்பதற்காகத்தான் பிரியங்கா காந்தி தன் தாய், தமையன் ஆகியோருடன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.