ஹைதராபாத்: சொத்து வரி செலுத்தாத காரணத்தால் காலஞ்சென்ற முன்னாள் முதல்வர் ஜெயயலிதாவுக்குச் சொந்தமான வீட்டுக்கு ஹைதராபாத் மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல் வைத்துள்ளனர்.
ஹைதராபாத் ஸ்ரீநகர் காலனியில் உள்ள அந்த வீட்டுக்குப் பல ஆண்டுகளாக சொத்து வரி செலுத்தப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
தற்போது நிலுவை வரித்தொகை ஏறக்குறைய ரூ.1.60 கோடியாக உயர்ந்துவிட்டதை அடுத்து, மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. பலமுறை நோட்டீஸ் அனுப்பியும், வரி கட்டப்படாமல் இருந்துள்ளது. இதையடுத்து மாநகராட்சி நிர்வாகத்தினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.
கடந்த 2017 முதல் ஜெயலலிதா இல்லத்துக்குச் சொத்து வரி நிலுவைத் தொகை கட்டப்படவில்லை என்றும் கடந்த பிப்ரவரி மாதம் இந்தச் சொத்துடன் தொடர்புள்ளவர்கள் எனக் கருதப்பட்டவர்களுக்கு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது என்றும் கூறப்படுகிறது.
பலமுறை அறிவிப்புகள் வெளியான பிறகும் எந்தவிதமான பதிலும் வராததால், ஹைதராபாத் இல்லத்தை மாநகராட்சி அதிகாரிகள் கையகப்படுத்தி உள்ளனர்.
ஜெயலலிதாவின் இந்தப் பங்களா வீட்டைப் பிரபல இந்தியத் தொழிலதிபர் விஜய் மல்லையா குத்தகை அடிப்படையில் பயன்படுத்தி வந்துள்ளார். அதன் பிறகே வீட்டு வரி பாக்கி முழுமையாகச் செலுத்தப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.


