ஜம்மு: கடந்த மே மாதம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையால் கோபமடைந்த பாகிஸ்தான், இந்தியா எல்லையில் துப்பாக்கிச்சூடு நடத்தியது.
இந்தத் தாக்குதலில் ஜம்மு-காஷ்மீரில் 27 பேர் உயிரிழந்தனர். 70க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
குறிப்பாக ஜம்மு-காஷ்மீரில் உள்ள பூஞ்ச், ஸ்ரீநகர், ரஜோரி எல்லையில் வாழும் பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர். அவர்களுடைய வீடுகள் சேதமடைந்தன.
இதனையடுத்து நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் தலைவருமான ராகுல்காந்தி ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்துக்குச் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
இந்தியா - பாகிஸ்தான் சண்டையில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளைத் தத்தெடுக்க எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முடிவு செய்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
“இந்திய - பாகிஸ்தான் சண்டையில் பூஞ்ச் மாவட்டத்தில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளின் கல்விச் செலவை ராகுல் காந்தி ஏற்றுள்ளார். இந்த உதவித் தொகைக்கான முதல் தவணை புதன்கிழமை (ஜூலை 29) வழங்கப்படும். குழந்தைகள் பட்டம் பெறும் வரை இந்த உதவித் தொகை தொடரும்,” என்று செய்தியாளர்களைச் சந்தித்த ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் தாரிக் ஹமீத் கர்ரா தெரிவித்தார்.