ஊட்டி: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி வரும் 13ஆம் தேதி நீலகிரி மாவட்டம் கூடலூருக்குச் செல்கிறார்.
கூடலூர் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் உயர்நிலைப் பள்ளியின் பொன்விழா நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் ராகுல் காந்தி எம்.பி. பங்கேற்க உள்ளார். இதற்காக அவர் அன்றைய தினம் டெல்லியில் இருந்து ஹெலிகாப்டரில் கூடலூர்-மைசூர் சாலையில் மார்தோமா நகர் பகுதியில் உள்ள மைதானத்திற்குச் செல்கிறார்.
அங்கிருந்து காரில் விழா நடைபெறும் பள்ளிக்குச் சென்று பொன்விழா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அந்த நிகழ்ச்சி முடிந்ததும் அவர் அங்கிருந்து கேரள மாநிலம் திருச்சூர் புறப்பட்டுச் செல்கிறார்.
கூடலூருக்கு வருகைதரும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்குக் காங்கிரஸ் கட்சி சார்பில் மார்தோமா நகர் மைதானம் முதல், விழா நடைபெற உள்ள பள்ளி வரையிலும் 2 கி.மீ தூரத்திற்கு நிர்வாகிகள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.
இதற்கான ஏற்பாடுகளைக் கட்சியின் அகில இந்திய உறுப்பினரும், தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளருமான கோசி பேபி தலைமையில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் செய்து வருகிறார்கள். ராகுல் காந்தி வருகையையொட்டி கூடலூரில் பலத்த காவல்துறை பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

