புதுடெல்லி: அமெரிக்க அதிபர் ஜோ பைடனை நினைவாற்றல் அற்றவர் என்று விமர்சித்ததற்கு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கவேண்டும் என்று தேசிய மருத்துவர் அமைப்பு கோரியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தின் அம்ராவதியில் நவம்பர் 16ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “அமெரிக்க அதிபர் ஜோ பைடனைப் போலவே பிரதமர் மோடியும் நினைவாற்றல் இழப்பை அனுபவித்து வருவதாகத் தெரிகிறது,’’ என்று கூறியிருந்தார். இந்த நிலையில், ராகுலின் இந்த விமர்சனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது தாயாரும் முன்னாள் காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்திக்கு தேசிய மருத்துவர் அமைப்பு பாரத் (National Medicos Organisation Bharat) கடிதம் எழுதியுள்ளது.
அதில் மருத்துவர் அமைப்பினர், “ஒரு பொது மேடையில் தலைவர்கள் குறித்து கூறப்படும் இதுபோன்ற அறிக்கைகளோ விமர்சனங்களோ, தவறான தகவல்களை நிலைநிறுத்தும் அபாயத்தை ஏற்படுத்துகின்றன. இது சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளின் புரிதல், சிகிச்சை மீது எதிர்மறை எண்ணங்களை ஏற்படுத்தும்.
“அமெரிக்க அதிபர் பைடனின் அறிவாற்றல் திறன்களை இழிவுபடுத்துவதுபோல் வெளிப்பட்ட ராகுல் காந்தியின் கருத்துகள் கவலை அளிக்கிறது. தன்னைவிட மூத்தவர் மற்றும் வயதான அரசியல் தலைவர் குறித்து ராகுல் இவ்வாறான கருத்துகளைத் தெரிவிப்பது என்பது இந்திய கலாசாரத்தைப் பாதிப்பதாக உள்ளது. இதுபோன்ற கருத்துகள் எதிர்க்கட்சித் தலைவருக்கான தகுதியற்ற தன்மையைக் குறிக்கின்றன.
“இது தனிநபர் மீதான தனிப்பட்ட அவமரியாதை மட்டுமல்ல; இந்தியாவில் சுகாதாரச் சவால்களை எதிர்த்து வாழும் எண்ணற்ற மூத்த குடிமக்கள் மீதான அவமரியாதை. உங்கள்மீதும் கூட இதுபோன்று உடல்நிலை குறித்த வதந்திகள் சில சமயங்களில் வந்திருக்கும். ஒரு தனிநபர் மீது இவ்வாறான கருத்துகள் சமூகத்தில் எவ்வளவு தீங்கு விளைவிக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
“ஆகவே, தனது கருத்துகளைப் பற்றி ராகுல் சிந்திக்க வேண்டும்; மேலும், அவர் பகிரங்க மன்னிப்பும் கோர வேண்டும். எதிர்காலத்திலும் இதுபோன்ற கருத்துகள் வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும்,’’ என்று குறிப்பிட்டிருந்தனர்.