புதுடெல்லி: கோல்கத்தாவில் உள்ள ‘ஐபேக்’ நிறுவன அலுவலகம், அதன் இயக்குநர் வீடு, புதுடெல்லியில் உள்ள நான்கு இடங்கள் உட்பட 10 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை (ஜனவரி 8) சோதனை நடத்தினர்.
மேற்கு வங்கத்தில் உள்ள ‘ஈஸ்டர்ன் கோல்பீல்ட்ஸ்’ நிறுவனத்துக்குச் சொந்தமான சுரங்கத்திலிருந்து சட்டவிரோதமாக நிலக்கரி தோண்டி எடுக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது.
இது தொடர்பாக 2020ஆம் ஆண்டு மத்தியப் புலனாய்வுப் பிரிவு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கின் அடிப்படையில், அமலாக்கத் துறை தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது.
குறிப்பாக, இந்த முறைகேட்டில் பயனடைந்ததாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் உறவினரும் திரிணாமூல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜியிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர்.
இச்சூழலில், கோல்கத்தாவின் சால்ட்லேக் பகுதியில் இருக்கும் ‘ஐபேக்’ நிறுவன அலுவலகம், அதன் இயக்குநர் பிரதீக் ஜெயின் வீடு உள்ளிட்ட 10 இடங்களில் அமலாக்க அதிகாரிகள் ஜனவரி 8ஆம் தேதி காலை 7 மணி முதல் சோதனை நடத்தினர்.
பிரதீக் ஜெயின் வீட்டில் சோதனை நடத்தியபோது, தனது உதவியாளர்களுடன் அங்கு வந்த மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, அங்கிருந்து சில ஆவணங்களையும் மின்னணு சாதனங்களையும் எடுத்துச் சென்றதாக அமலாக்கத் துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
இதுபோல, சால்ட்லேக் பகுதியில் உள்ள ‘ஐபேக்’ அலுவலகத்துக்குத் தனது உதவியாளர்களுடன் வந்த மம்தா, அங்கிருந்தும் சில் பொருள்களை எடுத்துசென்றதாக அதில் அமலாக்கத் துறை குறிப்பிட்டது.
2021ஆம் ஆண்டு நடைபெற்ற மேற்கு வங்காளச் சட்டமன்றத் தேர்தலில் திரிணாமூல் கட்சிக்கு ‘ஐபேக்’ நிறுவனம் வியூகம் அமைத்துக் கொடுத்ததுடன் அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப, ஊடகச் செயல்பாடுகளையும் கவனித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, ‘ஐபேக்’ நிறுவனத்தின்மீது அமலாக்க நடவடிக்கை மேற்கொண்டதைக் கண்டித்து திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் புது டெல்லியில் உள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அலுவலகத்தை முற்றுகையிட்டு வெள்ளிக்கிழமையன்று (ஜனவரி 9) போராட்டம் நடத்தினர்.
அப்போது, அமித்ஷாவுக்கு எதிராகவும் அமலாக்கத் துறைக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.

