புனே: ரயில் பயணி ஒருவர் எடுத்த தற்படம் (செல்ஃபி), இன்னோர் ஆடவரின் மரணம் தொடர்பான மர்மத்தை அவிழ்க்க உதவியது.
ஸாகித் ஸைடி என்ற ஆடவர் இவ்வாரம் திங்கட்கிழமையன்று இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் சென்ற ஒரு ரயிலில் பயணம் செய்தார்.
கல்யாண் ரயில் நிலையத்தில் ரயில் நின்றிருந்தபோது கைப்பேசி மூலம் தற்படம் எடுத்தபடி இருந்தார் ஸாகித். ரயில் மெதுவாக நகரத் தொடங்கியதும் அவரது கையிலிருந்த கைப்பேசியைப் பறிக்க முயன்றார் ஆகாஷ் ஜாதவ் என்ற ஆடவர்.
ஆனாலும், அவரது முயற்சி பயனளிக்கவில்லை. அப்போது எப்படியோ ஆகாஷின் முகத்தைத் தம் கைப்பேசியில் படம்பிடித்துவிட்டார் ஸாகித்.
அதுகுறித்த காணொளியை அவர் சமூக ஊடகத்தில் பகிர, அது பரவலானது. அக்காணொளியைக் கண்ட கல்யாண் ரயில் நிலையக் காவல்துறையினர், ஜாதவைக் கைதுசெய்தனர்.
தானே நகரக் காவல் நிலையத்திலும் ஜாதவ்மீது பல வழக்குகள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஜாதவிடமிருந்து இன்னொரு கைப்பேசியைப் பறிமுதல் செய்த காவல்துறை, அது எப்படிக் கிடைத்தது என்று அவனிடம் விசாரித்தனர்.
அந்தக் கைப்பேசி புனே நகரைச் சேர்ந்த பிரபாஸ் பாங்கே என்பவருடையது எனக் கண்டுபிடிக்கப்பட்டது.
வங்கியில் வேலைசெய்து வந்த பாங்கே, ஹோலிப் பண்டிகைக்காக அண்மையில் புனேயிலிருந்து சொந்த ஊர் சென்றார். பின்னர் மார்ச் 25 இரவு அவர் சொந்த ஊரிலிருந்து ரயில் மூலம் புனே திரும்பினார்.
ஆனால், வித்தல்வாடி ரயில் நிலையத்தில் அவரது உடல் கண்டெடுக்கபட்டது.
அவர் எப்படி இறந்தார் என்பதைக் கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறை தவித்து வந்தது.
இந்நிலையில், ஜாதவ் மூலம் அப்புதிருக்கு விடை கிடைத்தது.
வித்தல்வாடி ரயில் நிலையத்திலிருந்து ரயில் மெதுவாக நகர்ந்தபோது பாங்கேவிடமிருந்த கைப்பேசியைப் பறித்துக்கொண்டு ஓடினான் ஜாதவ். இதனால் அதிர்ச்சியடைந்த பாங்கே, கைப்பேசியை மீட்பதற்காக ரயிலிலிருந்து இறங்கியபோது தவறி விழுந்து இறந்துவிட்டார்.
இதனையடுத்து, ஜாதவ்மீது காவல்துறை வழக்கு பதிந்துள்ளது.