இந்தியாவின் பீகார் மாநிலம், பூர்னியா ரயில் நிலையத்தில் ஆண் பயணி ஒருவருக்கு நடக்கவிருந்த விபரீத சம்பவத்திலிருந்து ரயில்வே பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் காப்பாற்றினார்.
பூர்னியா ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட ரயிலில் ஏற முயன்றபோது நிலை தடுமாறிய அந்த ஆடவர், தளமேடை இடைவெளியில் விழப் பார்த்தார். ரயில்வே பாதுகாப்புப் படையைச் சேர்ந்த சஞ்சீவ் குமார் சிங், விரைந்து ஓடி அவரை சரியான நேரத்தில் ஆபத்திலிருந்து காப்பாற்றினார்.
பயணியைக் காப்பாற்றிய அந்த ஊழியருக்கு இணையவாசிகள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
"பயணியைக் காப்பாற்றியதற்குப் பாராட்டுகள். அனைத்து ரயில்களின் கதவுகள் மூடியிருப்பதற்கு முயற்சி எடுக்கப்படும் என நம்புகின்றேன்," என்று டுவிட்டரில் ஒருவர் பதிவிட்டார். ஓடும் ரயிலில் அவசர அவசரமாக ஏறுவதற்கு மக்கள் முயற்சி செய்யக்கூடாது என வேறு சிலர் எச்சரித்தனர். அவ்வாறு செய்வது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என அவர்கள் வலியுறுத்தினர்.

