ஜெய்ப்பூர்: மகாராஷ்டிரா, அசாம் மாநிலங்களைத் தொடர்ந்து பள்ளி ஆசிரியர்களிடம் ஒரேமாதிரியான சீருடை அணியும் திட்டத்தைச் செயல்படுத்த ராஜஸ்தான் மாநில அரசு திட்டமிடப்பட்டுள்ளது.
“ராஜஸ்தான் மாநிலக் கல்வித் துறை அமைச்சர் மதன் திலவர், வகுப்பறையில் மாணவர்கள் மத்தியில் நேர்மறையான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்பதில் மிகத் தீவிரமாக உள்ளார். இதன் மூலமாகத்தான் அவர்கள் வாழ்க்கையில் சரியான மதிப்பையும் கலாசாரங்களையும் கற்று உணர முடியும் என அவர் எண்ணுகிறார்,” என அந்த மாநிலக் கல்வி அமைச்சின் மூத்த அதிகாரி தெரிவித்தார்.
மேலும், “இதனை உணர்ந்தே கல்வித் துறை, அனைத்து பள்ளி ஆசிரியர்களிடமும் ஒரேமாதிரியான சீருடை அணியும் திட்டத்தைச் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இதனால், ஆசிரியர்கள் விருப்பம்போல் உடையணிந்து பள்ளிக்கு வர முடியாது,” என்றார் அவர்.
பல ஆசிரியர்கள் தங்களது உடலை வெளிக்காட்டும் வகையில் உடையணிந்து வருகின்றனர். இது மாணவர், மாணவியர் மத்தியில் நன்மதிப்பை ஏற்படுத்தாது என்று ராஜஸ்தான் மாநிலக் கல்வி அமைச்சர் திலவர் பொதுமேடையில் தெரிவித்திருந்தார். அவருடைய இந்தக் கருத்து பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பிய நிலையில் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.