புதுடெல்லி: அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு வழக்கு தொடர்பாக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல், காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகிய இருவரும் கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர்.
“ராமர் கோயிலில் முறைகேடு நடந்து இருப்பதை நீங்கள் அறிந்து இருப்பீர்கள். கடினமாக உழைத்து ஈட்டிய பணத்தை முழுநம்பிக்கை, பக்தியோடு நன்கொடை வழங்கிய பக்தர்கள் திருட்டுத்தனத்தால் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறார்கள். இந்த அறக்கட்டளையின் உறுப்பினர்கள் ஆர்எஸ்எஸ், விஹெச்பி, அதன் துணை அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என்பது பொதுமக்களுக்குத் தெரிந்ததே.
“இந்த மோசடி குறித்து சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அறக்கட்டளை தமது கணக்கு விவரங்களை பொதுவெளியில் வெளியிட வேண்டும். இது, பக்தர்களுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய துரோகம். இந்த விவகாரத்தில் பொறுப்புணர்வையும் உரிய தீர்வையும் உறுதி செய்வது தங்களது கடமை,” என்று அந்தக் கடிதத்தில் ராகுலும் கார்கேயும் வலியுறுத்தியுள்ளனர்.
“இந்தக் குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் பதவி அல்லது செல்வாக்கைப் பொருட்படுத்தாமல் அவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்,” என்றும் இருவரும் கேட்டுக்கொண்டனர்.

