விழுப்புரம்: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, 85 வயது நிரம்பிய மூத்த குடிமக்களும் வரையறுக்கப்பட்ட மாற்றுத்திறன் கொண்ட வாக்காளர்களும் வீட்டிலிருந்தபடியே வாக்களிப்பதற்கான அஞ்சல் வாக்குப்பதிவு தொடங்கி, நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தைலாபுரம் இல்லத்தில், பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ், 87, சட்டமன்றத் தேர்தலுக்கான தமது வாக்கை அஞ்சல் முறையில் செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திரு ராமதாஸ், “என் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அரசியலுக்கு வர மாட்டார்கள் என்று சத்தியம் செய்திருந்தேன். குடும்ப நெருக்கடி காரணமாக அதை மீறி என் மகன் அன்புமணியை அரசியலுக்குக் கொண்டுவந்து அமைச்சராக்கினேன். இந்தியாவிலேயே சிறு வயதில் ஒருவரை அமைச்சராக்கியது நான்தான்,” என்று கூறினார்.
85 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் அஞ்சல் வாக்கைப் பெற்றுவரும் தேர்தல் பணியாளர்கள் திண்டிவனம் தொகுதியில் திரு ராமதாசின் வாக்கைப் பதிவு செய்தனர்.
இதற்கிடையே, பாமக நிறுவனர் ராமதாசைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்ததாகக் கூறப்பட்டது.
முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 12) சேலம் மேற்குத் தொகுதியில் உள்ள பள்ளப்பட்டி பகுதியில் பிரசாரம் மேற்கொண்டபோது திரு ராமதாஸ் திடீரென மயங்கிவிழுந்தார். பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

