புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலத்தின் பரேலியில் ரூ.22 கோடியில் ‘ராமாயண் வாட்டிகா’ எனும் பெயரில் ஒரு புதிய பூங்கா 6 ஏக்கரில் அமைக்கப்படுகிறது.
இப்பூங்காவில் 51 அடி உயர ராமர் சிலை நிறுவப்படுகிறது.
குஜராத் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய 182 மீட்டர் உயர வல்லபாய் படேல் சிலையை வடித்திருந்த பத்ம ஸ்ரீராம் சுத்தார், இந்த ராமர் சிலையையும் வடித்துள்ளார்.
ராமர் கடந்து சென்ற சித்ரகுட், கிஷ்கிந்தா, துரோணகிரி உள்ளிட்ட 6 வனப்பகுதிகளின் 60 சிற்பக் காட்சிகளும் பூங்காவில் வடிவமைக்கப்படுகின்றன.
பரேலி வளர்ச்சி ஆணையம் சார்பில் இந்தப் பூங்காவை அதன் துணைத் தலைவர் அதிகாரி மணிகண்டன் அமைத்து வருகிறார்.
பூங்கா பணிகள் முடிவடையும் தருவாயில், ஒரு மலர்க் கண்காட்சிக்கும் இவர் ஏற்பாடு செய்திருந்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய மலர்க் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்ததாக மணிகண்டன் கூறினார்.
இந்த பூங்காவில் பல மாதங்களுக்கு முன்னர் ஏறக்குறைய 1,600 பூஞ்செடிகள் நடப்பட்டன. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராமர், சீதை, ஹனுமன் உள்ளிட்ட கடவுள்களின் வடிவங்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப் பட்டிருந்தன.
தொடர்புடைய செய்திகள்
“ஆன்மிகம் மற்றும் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் ராமாயண் வாட்டிகா அமைக்கப்படுகிறது. இன்னும் மூன்று மாதங்களில் திறக்கப்பட உள்ள பூங்காவில், தற்போது நடத்திய மலர்க் கண்காட்சி, இனி ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரிக்காக மூன்று நாள்கள் நடைபெறவுள்ளது,” என்று இந்து தமிழ் திசை நாளிதழிடம் நெய்வேலியைச் சேர்ந்த தமிழரான அதிகாரி மணிகண்டன் ஐஏஎஸ் கூறினார்.
மலர்க் கண்காட்சியில் ராமாயணத்தில் ராமர் கடந்து சென்ற வனத்தில் பூத்திருந்த மலர்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
முழு தோட்டமும் லட்சக்கணக்கான மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.