இம்பால்: அரிய வகை ரஷ்யப் பறவையான ‘பைக்கல் டீல்’ எனும் சிறிய, நன்னீர் வாத்து 108 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் தென்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரைச் சேர்ந்த ‘மணிப்பூர் காட்டுயிர் ஆய்வாளர்கள்’ மற்றும் இந்தியப் பறவைப் பாதுகாப்புக் கட்டமைப்பைச் சேர்ந்த குழு, கடந்த புதன்கிழமை (ஜனவரி 10), அம்மாநிலத்தின் லாம்பெல் சதுப்பு நிலப் பகுதியில் ‘பைக்கல் டீல்’ பறவையைக் கண்டனர்.
கடைசியாக 1913 மார்ச் 16ஆம் தேதியன்றும் 1915 நவம்பர் 28ஆம் தேதியன்றும் இப்பறவை அங்கு தென்பட்டது.
கிழக்கு ரஷ்யாவிலும் குளிர்காலத்தில் கிழக்காசியாவிலும் இப்பறவை இனப்பெருக்கம் செய்யும்.
அனைத்துலக இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் அருகிவரும் உயிரினங்களின் பட்டியலில் ‘பைக்கல் டீல்’ இடம்பெற்றுள்ளது.
வேட்டை காரணமாகவும் சதுப்புநிலப் பகுதிகள் அழிக்கப்பட்டு வந்ததாலும் கடந்த 2011ஆம் ஆண்டிற்குமுன் அதிக அச்சுறுத்தலுக்கு ஆளாக வாய்ப்புள்ள பறவைகளில் ஒன்றாக இது பட்டியலிடப்பட்டு இருந்தது.
“அச்சுறுத்தல்கள் நீடிக்கின்றன. ஆயினும், பைக்கல் டீல் பறவைகளின் எண்ணிக்கையும் அதன் வாழிடப் பரப்பும் அதிகரித்துள்ளன,” என்று மணிப்பூர் காட்டுயிர் ஆய்வாளர்கள் அமைப்பின் செயலர் எலங்பம் பிரேம்ஜித் கூறினார்.