புதுடெல்லி: சீனாவால் கடுமையாகக் கட்டுப்படுத்தப்படும் அரிய மண்வளங்களுக்கான மாற்று விநியோக வழிகளைத் தேடும் நோக்கில் இந்தியா, சக்திவாய்ந்த கிளர்ச்சிக் குழு ஒன்றின் உதவியுடன் மியன்மாரிலிருந்து அரிய கனிம மாதிரிகளைப் பெற முயன்று வருவதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.
மியன்மாரின் வடகிழக்குப் பகுதியில் உள்ள கச்சின் விடுதலைப் படை (கேஐஏ) கட்டுப்பாட்டில் உள்ள சுரங்கங்களிலிருந்து மாதிரிகளைச் சேகரிக்குமாறு இந்திய சுரங்க அமைச்சு, அதற்குச் சொந்தமான மற்றும் தனியார் நிறுவனங்களைக் கேட்டுக்கொண்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்குத் தகவல் அளிக்கப்பட்டது.
அரசுக்குச் சொந்தமான சுரங்க நிறுவனமான ஐஆர்இஎல், தனியார் நிறுவனமான மிட்வெஸ்ட் அட்வான்ஸ்டு மெட்டீரியல்ஸ் ஆகியவை அரிய மண்காந்தங்களை வணிக ரீதியாக உற்பத்தி செய்ய கடந்த ஆண்டு அரசு நிதியுதவி பெற்றன.
கனிமப்பொருள் சார்ந்த மேற்கூறப்பட்ட கலந்துரையாடலிலும் இந்த இரண்டு நிறுவனங்களும் பங்கேற்றன.
இந்த மாதிரிகளை உள்நாட்டு ஆய்வகங்களில் சோதித்து, மின்வாகனங்களிலும் அதிநவீன சாதனங்களிலும் பயன்படுத்தக் கூடிய அளவில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த புதுடெல்லி விரும்ம்புவதாகக் கூறப்படுகிறது.
அரசுசாரா அமைப்பு ஒன்றுடன் இந்தியா ஈடுபடுவது அரிதான நிகழ்வு குறிக்கும் வகையில், இந்தக் கோரிக்கையை அமைச்சு ஜூலை மாதம் ஒரு இணையவழி கூட்டத்தில் முன்வைத்ததாக இரண்டு பேர் தெரிவித்ததாக ராய்ட்டர்சின் அறிக்கை குறிப்பிடுகிறது. இந்திய வெளியுறவு மற்றும் சுரங்க அமைச்சுகள் தனது கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை என்றும் ராய்ட்டர்ஸ் கூறுகிறது. அத்துடன்,கேஐஏ தரப்பும் எதுவும் கூறவில்லை என்றும் அந்தச் செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.