மும்பை: மும்பை தாராவி மறுசீரமைப்புத் திட்டத்துக்காக அப்பகுதியில் வசிக்கும் மக்களை வேறு பகுதிகளில் குடியமர்த்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக செக்டர் 6, சாகுநகர் பகுதியில் வசிக்கும் குடும்பங்களை வேறு பகுதிகளில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அங்கிருந்து ஏறக்குறைய 900 பேர் படிப்படியாக வெளியேற்றப்பட உள்ளனர். இதற்காக நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது. தாராவியிலிருந்து வீடுகளை காலி செய்ய ரூ.15,000 உதவித் தொகை வழங்கப்படுகிறது.
மேலும், ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதம் ரூ.22,000 வாடகை படி வழங்கப்படவுள்ளது. பெரிய வீடுகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு தலா ரூ.30,000 வரை வாடகை படி வழங்கப்படும்.
தாராவியில் கட்டப்படும் புதிய வீடுகளில் மக்கள் குடியேறும்வரை மாதந்தோறும் வாடகை படி வழங்கப்படும். 2028க்குள் தாராவியில் 10,000 வீடுகள் கட்டப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படும்.
2032 ஜனவரிக்குள் திட்டப் பணிகளை முழுமையாக நிறைவுசெய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அடுக்குமாடி குடியிருப்புகள் மட்டுமன்றி பள்ளிகள், சமுதாய நலக்கூடங்கள், பூங்காக்கள், மருத்துவமனைகள், குழந்தைகள் நல மையங்கள், வணிக வளாகம், தொழிற்பூங்கா உள்ளிட்டவையும் தாராவியில் அமைக்கப்பட உள்ளதாக மும்பை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

