புதுடெல்லி: ஈரான்மீது தாக்குதல் நடத்துவதற்காக இந்தியத் துறைமுகங்களை அமெரிக்கக் கடற்படை பயன்படுத்துவதாகச் செய்திகள் வெளியாகின.
அவற்றை இந்தியா மறுத்துள்ளதுடன், அத்தகைய ஆதாரமற்ற, புனையப்பட்ட கருத்துகளுக்கு எதிராக மக்களை விழிப்புடன் இருக்கும்படி அந்நாட்டு அரசாங்கங்கள் கேட்டுக்கொண்டுள்ளது.
இது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சு வெளியிட்ட ‘எக்ஸ்’ தளப் பதிவில், “இந்தியத் துறைமுகங்கள் அமெரிக்கக் கடற்படையால் பயன்படுத்தப்படுவதாக ஒன் அமெரிக்கா நியூஸ் (ஓஏஎன்) எனும் அமெரிக்க ஊடகம் வெளியிட்ட செய்தி போலியானது. இதுபோன்ற ஆதாரமற்ற, புனையப்பட்ட கருத்துகள் குறித்து நாங்கள் உங்களை எச்சரிக்கிறோம்,” எனத் தெரிவித்துள்ளது.
முன்னதாக, ‘ஓஏஎன்’ எனும் செய்தி ஊடகத்திற்கு முன்னாள் அமெரிக்க ராணுவ அதிகாரி டக்ளஸ் மேக்ரிகோர் அளித்த நேர்காணலில், “எங்கள் ராணுவத் தளங்களும் துறைமுக அமைப்புகளும் அழிக்கப்பட்டுள்ளன. நாங்கள் இந்தியாவையும் அதன் கடற்படைத் துறைமுகங்களையும் சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது,” எனக் குறிப்பிட்டிருந்தார்.
அவரது நேர்காணலிலிருந்து சில படங்களை எடுத்து, அவற்றை ‘போலிச் செய்தி’ என முத்திரையிட்டு எச்சரிக்கை அறிக்கையுடன் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் இந்திய வெளியுறவு அமைச்சு பகிர்ந்துள்ளது.

