புதுடெல்லி: ஈரான் போரினால் கச்சா எண்ணெய், எரிவாயு, திரவ பெட்ரோலிய எரிவாயு (எல்பிஜி) போன்றவற்றின் உற்பத்தியும் விநியோகமும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
திரவ பெட்ரோலிய எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்தியாவில் வணிக ரீதியிலான சமையல் எரிவாயு கலன் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பல ஆயிரம் ஹோட்டல்கள் உட்பட 330 மில்லியன் வீடுகளில் எல்பிஜி எரிவாயு பயன்படுத்தப்படுகிறது. அங்கு ஆண்டுக்கு 31.3 மில்லியன் டன் எரிவாயு உபயோகப்படுத்தப்படுகிறது.
எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால் சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பெரு நகர ஹோட்டல்கள் பழையபடி விறகு அடுப்பு முறைக்கு மாறிவருகின்றன. ஹோட்டலில் விற்கப்படும் உணவு வகைகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக அதிக எரிபொருள் தேவைப்படும் விரைவு உணவு விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. மும்பை, கோல்கத்தா ஆகிய நகர்களில் 20 விழுக்காடு ஹோட்டல்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
வணிக கலன்கள் கிடைக்காததால், கள்ளச் சந்தையில் எரிவாயு கலன்கள் மிக அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. அதனால், மீண்டும் பழங்கால விறகு அடுப்பு முறைக்கு மாறுவதாக ஹோட்டல் உரிமையாளர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.
ஹோட்டல்களில் உணவு விநியோகம் அத்தியாவசியத் தேவை என்பதால், எரிவாயு விநியோகத்தை மத்திய அரசு சீர்படுத்த வேண்டும் என ஹோட்டல் உரிமையாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கள்ளச் சந்தையில் எரிவாயு கலன் விற்பனையைத் தடுக்க, எரிவாயு கலனுக்கான காத்திருப்புக் காலம் 21 நாள்களில் இருந்து 25 நாள்களாக உயர்த்தப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
மேலும், பலரும் மின்சார அடுப்புகளுக்கு மாறுவதால், இணைய வணிகத் தளங்களில் மின்சார அடுப்புகளின் (இன்டக்சன் ஸ்டவ்) விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
பிளிப்கார்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கடந்த 4, 5 நாள்களில் மட்டும் மின் அடுப்புகளின் விற்பனை மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக, டெல்லி, மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இதற்கான தேவை பன்மடங்கு உயர்ந்துள்ளது.
அமேசான் தளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் விற்பனை 20 மடங்கு அதிகரித்துள்ளது.
தொடர்ந்து எரிவாயு பற்றாக்குறை நிலை நீடித்தால், மின்சார அடுப்புகளுக்கும் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகும் என்று வணிகர்கள் கருத்துக்கூறினர்.

