புதுடெல்லி: எரிசக்தியைச் சேமிக்கும் நோக்கில் ஆய்வுப் பயணங்களைத் தவிர்க்குமாறு நாடாளுமன்றக் குழுக்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
நாடாளுமன்ற இரு அவைகளின் உறுப்பினர்களைக் கொண்டு பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் அனைத்துத் துறைகளிலும் ஆய்வு செய்ய அக்குழுக்கள் நாடு முழுவதும் பயணம் செய்வது வழக்கம்.
அக்குழுக்களில் கிட்டத்தட்ட15 எம்.பி.க்கள், உயர் அதிகாரிகள், அலுவலர்கள் ஆகியோர் இடம்பெறுவர். இவர்களின் பயணங்களுக்கெனப் பல லட்ச ரூபாய் செலவாகும். இதில் எரிசக்திச் செலவும் அடங்கும்.
இந்நிலையில், அமெரிக்கா - ஈரான் போர் காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடியைச் சமாளிக்க, எரிசக்தியை மிச்சப்படுத்தும்படி பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதை ஏற்று பாஜக ஆளும் மாநிலங்களில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த மாற்றத்திற்காக நாடாளுமன்றத்திலும் சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதன் ஒருபகுதியாக எரிசக்திச் சிக்கனத்தைக் கடைப்பிடிக்குமாறு நாடாளுமன்றக் குழுக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்றக் குழுத் தலைவர்கள் இயன்றவரை டெல்லியிலேயே கூட்டங்களை நடத்தவும் ஆய்வுப் பயணங்களைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கொவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் நாடாளுமன்றக் குழுக் கூட்டங்களுக்கு இதேபோன்ற அறிவுறுத்தல் பரிந்துரைக்கப்பட்டது.

