கோல்கத்தா: ஆண் சிங்கத்திற்கு அக்பர் என்றும் பெண் சிங்கத்திற்கு சீதா என்றும் பெயரிடப்பட்டதால் எழுந்த சர்ச்சையை அடுத்து, அவற்றுக்கு வேறு பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் திரிபுரா மாநிலம், செப்பாகிஜலா விலங்கியல் தோட்டத்திலிருந்து மேற்கு வங்க மாநிலம், சிலிகுரி விலங்கியல் பூங்காவிற்கு இவ்வாண்டு பிப்ரவரி மாதம் அச்சிங்கங்கள் இடமாற்றம் செய்யப்பட்டன.
அவற்றுக்கு அக்பர், சீதா எனப் பெயர் சூட்டப்பட்டதை எதிர்த்து, விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு கோல்கத்தா உயர் நீதிமன்றத்தில் முறையிட்டது.
அதன் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், சிங்கங்களுக்கு வேறு பெயர் சூட்டும்படி அறிவுறுத்தியது.
இந்நிலையில், ஆண் சிங்கத்திற்கு ‘சூரஜ்’, பெண் சிங்கத்திற்கு ‘தனயா’ எனும் பெயர்களைச் சூட்டும்படி மேற்கு வங்க மாநில அரசு, மத்திய விலங்கியல் தோட்ட ஆணையத்திடம் பரிந்துரைத்துள்ளது. அவை ஏற்றுக்கொள்ளப்பட்டால், அனைத்து ஆவணங்களிலும் பெயர் மாற்றம் செய்யப்படும்.