சென்னை: தமிழகம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
ஒடிசாவைச் சேர்ந்த குப்தா மின்கட்டமைப்பு நிறுவனம் மீதான மோசடி புகார் தொடர்பாக இந்தச் சோதனை நடத்தப்பட்டது.
இந்நிறுவனம் போலி ஆவணங்களைத் தயாரித்து, கனரா வங்கியில் ரூ. 1,100 கோடி ரூபாய் கடன் வாங்கியதாகக் குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளது.
மேலும், அந்நிறுவனம் தாக்கல் செய்த ஆவணங்களில் ஏராளமான பொய்த் தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
வங்கி சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணை நடத்தி வரும் சிபிஐ அதிகாரிகள், குப்தா நிறுவன இயக்குநர்களின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 19) நடத்தப்பட்ட இந்தச் சோதனையின்போது புவனேஸ்வர், கோல்கத்தா நகரங்களில் உள்ள குப்தா நிறுவனத்தின் அலுவலகங்கள், இயக்குநர்களின் வீடுகள், உத்தராகண்ட், தமிழகத்தின் திருவள்ளூரில் உள்ள பதிவு செய்யப்பட்ட அலுவலகங்கள் ஆகியன சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
அப்போது நிதி மோசடி தொடர்பான பல்வேறு முக்கியமான ஆவணங்கள் சிக்கியதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

