புதுடெல்லி: இந்தியாவில் வங்கியில், 13,000 கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்து, வெளிநாட்டுக்குத் தப்பி ஓடிய வைர வியாபாரி மெஹுல் சோக்சியை விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்காகச் சிறையில் தனி அறை தயார் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.
மகாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த மெஹுல் சோக்சி, அவரது உறவினர் நிரவ் மோடி இணைந்து வைர வியாபாரம் செய்தனர். அவர்கள், மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையில், 13,000 கோடி ரூபாய் கடன் பெற்று அதை திருப்பிச் செலுத்தாமல், 2018ல் வெளிநாடு தப்பிச் சென்றனர்.
ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில் நிரவ் மோடி 2019ல் கைது செய்யப்பட்டார்.
மற்றொரு குற்றவாளியான மெஹுல் சோக்சி, 2018ல் அமெரிக்கா தப்பிச் சென்றார். பின்னர் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர், பெல்ஜியத்தில் கைது செய்யப்பட்டார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தும் முயற்சி நடந்தது.
தற்போது மெஹுல் சோக்சி பெல்ஜியம் நாட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்து கடைசி முயற்சியாக பெல்ஜியம் நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
ஆனால் அவரது கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. இதனால் சோக்சி விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படவுள்ளார். இதற்காக சிறையில் தனி அறை தயார் செய்யப்பட்டு வருகிறது என வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இவர் மும்பை அல்லது டெல்லியில் உள்ள சிறையில் அடைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

