இந்தியாவின் பீகார் மாநிலத்தில் கங்கை ஆற்றின் மேலே கட்டப்பட்டுவரும் பாலம் கடந்த 14 மாதங்களில் இரண்டாவது முறையாக நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடிந்து விழுந்தது.
ரூ.1,710 கோடி செலவில் இந்தப் பாலம் கட்டப்பட்டு வந்தது.
முன்னதாக, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமும் இதே பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. தளர்வான கம்பிவட நிலைமேடையே அதற்குக் காரணமாகக் கூறப்பட்டது. ஆனால், மோசமான கட்டுமானப் பொருள்களால்தான் பாலம் இடிந்து விழுந்தது என்று ஒருதரப்பினர் அப்போது குற்றம் சாட்டியிருந்தனர்.
ஆனால், கட்டுமானத்தில் குறைபாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, தாங்களே இம்முறை பாலத்தை விழச் செய்ததாக அரசாங்க அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்நிகழ்வின்போது, பாலத்திற்கு அருகே நின்றிருந்த பாதுகாவல் ஒருவரைக் காணவில்லை என்றும் அவரைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இரண்டாம் முறையாகப் பாலம் இடிந்து விழுந்ததன் தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை வழங்குமாறு கூடுதல் தலைமைச் செயலாளருக்கு பீகார் முதல்வர் நிதீஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
சென்ற 2014ஆம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் தேதி திரு நிதீஷ்குமார் இப்பாலத்திற்கு அடிக்கல் நாட்டினார். 2020 மார்ச் மாதமே அதன் கட்டுமானப் பணிகள் முடிவடைய வேண்டிய நிலையில், இப்போதே மூன்று ஆண்டுகளுக்குமேல் தாமதமாகிவிட்டது.
இந்த 3.16 கிலோமீட்டர் நீளப் பாலமானது வடக்கு, தெற்கு பீகாரை இணைக்கும் வகையில் கங்கை ஆற்றுக்குமேல் கட்டப்படும் ஆறாவது பாலம் என்பது குறிப்பிடத்தக்கது.