புதுடெல்லி: பல்வேறு மோசடி வழக்குகளில் சிக்கி டெல்லி மண்டோலி சிறையில் உள்ள சுகேஷ் சந்திரசேகர், காதலர் தினத்தை முன்னிட்டு நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு 30 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெலிகாப்டரைப் பரிசாக அளித்துள்ளார்.
ஹெலிகாப்டரின் முகப்பில், ஜாக்குலின் பெர்னாண்டசின் முதல் இரு எழுத்துகளை பிரதிபலிக்கும், ‘ஜே. எப்.’ என, முத்திரை பதிக்கப்பட்டுள்ளது.
டெல்லி தொழிலதிபரின் மனைவியை ஏமாற்றி 100 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டவர் கர்நாடகாவின் பெங்களூரைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர்.
சுகேஷ், முன்பு அ.தி.மு.க.,வின் இரட்டை இலைச் சின்னத்தை மீட்கும் விவகாரம் தொடர்பான லஞ்ச வழக்கிலும் சிக்கியவர்.
பல்வேறு மோசடி குற்றச்சாட்டுகளில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட சுகேஷ், தற்போது டெல்லி மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
நடிகை ஜாக்குலினுடன் தனக்குத் தொடர்பு இருப்பதாக சுகேஷ் கூறிவரும் நிலையில், ஜாக்குலின் அதை மறுத்து வருகிறார். இருப்பினும், அமலாக்கத் துறையின் விசாரணை வளையத்தில் ஜாக்குலின் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

