புதுடெல்லி: 2025-26ம் நிதியாண்டு தமிழக ரயில்வே திட்டங்களுக்காக 6,626 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சு தெரிவித்துள்ளது.
தமிழக ரயில்வே திட்டங்கள், கோவை, மதுரை மெட்ரோ ரயில் தடங்களுக்கு மத்திய அரசு எதையும் கொடுக்கவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார்.
இது பற்றி புதுடெல்லியில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
கடந்த 2009-14 காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணி ஆட்சிகாலத்தில், தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.879 கோடி மட்டுமே நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
தற்போதைய மத்திய அரசு தமிழக ரயில்வே திட்டங்களுக்கு என ரூ.6,626 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இது 2009- 14ம் ஆண்டுகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 879 கோடி ரூபாயை காட்டிலும் 654 விழுக்காடு அதிகமாகும்.
இதில் அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் ரூ.2,948 கோடி மதிப்பீட்டில் 77 ரயில் நிலையங்களில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், 2,587 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிய தண்டவாளங்கள் அமைக்கும் பணிகள் ரூ.33.467 கோடி செலவில் நடந்து வருகின்றன.
தமிழகத்தில் 10 புதிய ரயில் தடங்கள், 3 அகல ரயில் தடங்கள் மற்றும் 9 இரட்டை வழித் தடங்கள் அடங்கும். இவற்றில் புதிய ரயில் பாதைக்கு ரூ.246 கோடியும் அகல ரயில் தடத்திற்கு ரூ.478 கோடியும் இரட்டை வழித் தடத்துக்கு ரூ.812 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் மேற்கண்ட திட்டங்களுக்கு மொத்தம் ரூ.1,536 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக திரு வைஷ்ணவ் விளக்கினார்.