புதுடெல்லி: கடந்த 20 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வரும் வறுமை ஒழிப்புத் திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரை ‘விக்சித் பாரத் ரோஜ்கர் மற்றும் அஜீவிகா மிஷன்’ மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பான மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் வழங்கியது. இதற்குக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், புதிய ஊரக வேலை உறுதித் திட்ட (விபி-ஜி ராம் ஜி) மசோதாவை மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மக்களவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தார்.
‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கு (எம்ஜிஎன்ஆர்இஜிஏ) மாற்றாக இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. முன்னதாக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதிக்குச் சென்று, மகாத்மா காந்தி பெயரில் உள்ள திட்டத்தின் பெயரை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து முழக்கம் எழுப்பினர். அத்துடன், இதை நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு அனுப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
ஆனால், எதிர்க்கட்சியினரின் அமளியையும் பொருட்படுத்தாமல், அந்த மசோதாவை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மக்களவையில் தாக்கல் செய்தார். இதுகுறித்து சிவராஜ் சிங் சவுகான் கூறும்போது, “மகாத்மா காந்தி எங்கள் இதயங்களில் வாழ்கிறார். மிகவும் ஒடுக்கப்பட்டவர்களின் நலன் தலையாய முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்பது காந்திஜி மற்றும் பண்டிட் தீன்தயாள் ஆகிய இருவரின் முன்னுரிமையாக இருந்தது.
“நாங்கள் அவர்களுடைய கொள்கைகளை மதிக்கிறோம். அவர்களுடைய கொள்கைகளின் அடிப்படையில்தான் பல வறுமை ஒழிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்,’’ என்றார்.
இதுகுறித்து ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘வரும் 2047க்குள் வளர்ந்த இந்தியாவாக உருவாக்க வேண்டும் என்ற இலக்கை அடையும் வகையில் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இது வேலைவாய்ப்பை உருவாக்குவதுடன் ஊரக உள்கட்டமைப்பு வசதியையும் மேம்படுத்தும்’’ என கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறும்போது, “மகாத்மா காந்தி என் குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்ல. ஆனால் அவர் என் குடும்ப உறுப்பினரைப் போன்றவர். இது ஒட்டுமொத்த நாட்டின் உணர்வுபூர்வமான விஷயம். இந்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக் குழு பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும்,’’ என்றார்.
தொடர்புடைய செய்திகள்
புதிய மசோதாவுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு எதிர்க்கட்சிகள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், திமுக எம்.பி. டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் மகாத்மா காந்தியின் புகைப்படத்தை கையில் ஏந்தியபடி பங்கேற்றனர்.

